இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயக சதுர்த்தி. நாட்டுக்கு நாடு இது வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்பட்டாலும் விநாயகருக்கு படைக்கப்படும் பலகாரங்கள் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். அவற்றில் இந்த பால் கொழுக்கட்டை முக்கிய இடம் பிடிக்கும். என்ன தேவை? பச்சரிசி - அரை கிலோ பால் - அரை லிட்டர் சர்க்கரை - ஒன்றரை கப் ஏலக்காய் - 6 முந்திரி பருப்பு - 10 நெய் - 2 டீஸ்பூன் எப்படிச் செய்வது? செய்முறை பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்தில் பிசைந்து, அதை சீடை அளவில் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உருட்டிய கொழுக்கட்டைகளைப் போடவும். வெந்ததும் வடித்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரில் பாலை சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன் வேக வைத்த கொழுக்கட்டை, பொடித்த ஏலக்காயை சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.